மக்களுக்குச் செய்த உபதேசங்கள்
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக மட்டும் இருக்கவில்லை. அதிகமான மார்க்க ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தமையால் மக்களுக்கு நல்லது குறித்து உபதேசம் செய்பவராகவும் மக்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக செல்வதைக் கண்டால் சரியான வழியைக் காண்பித்து நேர்வழியில் செலுத்தக் கூடியவராகவும் இருந்தார்கள்.
கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தம் உரையில்) உங்கள் விஷயத்தில் நான் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். உங்களில் நான் சிறந்தவன் இல்லை. நான் நல்ல விதமாக நடந்து கொண்டால் எனக்கு உதவியாக இருங்கள். நான் தவறாக நடந்தால் என்னை சீர்செய்யுங்கள்.
ஏனென்றால் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஷைத்தான் என்னிடத்தில் உள்ளான். நான் கோபமாக இருக்கும் போது என்னை விட்டும் விலகி விடுங்கள். உங்கள் உடம்புகளிலும் தோல்களிலும் (காய) வடுவை நான் ஏற்படுத்த மாட்டேன் என்று கூறினார்கள்.
நூல் : அஸ்ஸுஹ்த் லிஅபீ தாவூத் பாகம் : 1 பக்கம் : 34
இப்ராஹிம் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் தம் உரையில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இரவிலோ பகலிலோ ஆட்சி அதிகாரத்தின் மீது பேராசைப்பட்டதில்லை. அதில் ஆசை கொண்டு இரகசியமாகவோ பகிரங்கமாகவோ அல்லாஹ்விடத்தில் நான் அதை வேண்டியதுமில்லை. என்றாலும் (ஒரு தலைவர் நியமிக்கப்படா விட்டால்) குழப்பம் ஏற்படுவதைப் பயந்தேன்.
ஆட்சி செலுத்துவதில் எனக்கு நிம்மதியில்லை. மிகப் பெரிய காரியம் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் (என்னை) உறுதிப்படுத்தினாலே தவிர அதை (கையாளுவதற்கு) எனக்கு எந்தச் சக்தியும் வலிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : ஹாகிம்-4422 , பாகம் : 3 பக்கம் : 70
அவ்ஸத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களுக்கு உறையாற்றினார்கள். அப்போது அவர்கள் நான் (நிற்கும்) இந்த இடத்தில் சென்ற வருடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார்கள். அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்தை வேண்டுங்கள்.
ஏனென்றால் உறுதிக்குப் பிறகு ஆரோக்கியத்தை விட (வேறு பெரிய பாக்கியத்தை) எவரும் கொடுக்கப்பட மாட்டார். உண்மை பேசுவதைக் கடைப் பிடியுங்கள். ஏனென்றால் உண்மையாகிறது நல்ல கரியங்களைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) சொர்க்கத்தில் இருப்பார்கள். பொய் சொல்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.
ஏனென்றால் பொய்யாகிறது தீமைகளைக் கொண்டு வரக்கூடியது. அவ்விரண்டும் (பெற்றவர்கள்) நரகத்தில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். கோபித்துக் கொள்ளாதீர்கள். (நட்பை) முறித்துக் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு சகோதரர்களாய் இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (தனது உரையில்) கூறினார்கள்.
நூல் : அஹ்மத்-5
கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸைனப் என்றழைக்கப்படும் அஹ்மஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மௌன விரதம் பூண்டு) பேசாமல் இருப்பவளாகக் கண்டார்கள். இவளுக்கென்ன ஆயிற்று? இவள் ஏன் பேசாமல் இருக்கிறாள்? என்று கேட்டார்கள். மக்கள் (இவர் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள் என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளிடம் நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மௌன விரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்டக் காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும் என்று சொன்னார்கள். ஆகவே அவள் (மௌன விரதத்தைக் கலைத்துப்) பேசினாள்.
நூல் : புகாரி-3834
36) மக்களிடம் நடந்து கொண்ட முறைகள்
ஒரு சிறந்த ஆட்சியாளன் மக்களிடத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்வானோ அம்முறையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களிடத்தில் நடந்து கொண்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் ஆட்சி செய்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய உன்னதமான தலைவராகத் திகழ்ந்தார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:
பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உனக்கு இன்ன இன்னப் பொருட்களைத் தருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.
நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்ன இன்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள் என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்த போது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகள் எடுத்துக் கொள்வீராக என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி-2296
அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பிரச்சனைகள் கொண்டு வரப்படும் போது தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் நியாயமான அடிப்படையில் மார்க்கம் சொல்கின்ற அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மிக நெருங்கிய தோழராக இருந்த போதிலும் உமர் (ரலி) அவர்களிடத்தில் நியாயம் இல்லாத போது அவர்களுக்கு எதிராகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவம் உணர்த்துகிறது.
காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
அன்சாரிகளைச் சார்ந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடத்தில் (மனைவியாக) இருந்த போது ஆஸிம் பின் உமர் என்பவரை (உமர் (ரலி) அவர்களின் மூலம்) பெற்றெடுத்தார். பிறகு அப்பெண்னை விட்டும் உமர் (ரலி) அவர்கள் பிரிந்து விட்டார்கள். (ஒரு நாள்) உமர் (ரலி) அவர்கள் குபா என்ற இடத்திற்கு வந்தார்கள்.
அப்போது பள்ளிவாசலின் முற்றத்தில் தம் மகன் ஆஸிம் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது கொடுங்கையை பிடித்து தம் வாகனத்தில் தனக்கு முன்னால் வைத்தார்கள். அப்போது அச்சிறுவனின் பாட்டியார் வந்து உமர் (ரலி) அவர்களிடத்தில் சர்ச்சையில் ஈடுபட்டார்கள்.
இறுதியில் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இவன் என்னுடைய மகன். (என்னிடத்தில் தான் இருப்பான்.) என்று கூறினார்கள். இவன் எனது மகன் (என்னிடத்தில் தான் இருப்பான்) என்று அப்பெண் கூறினார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அப்பெண்ணுடன் அச்சிறுவனை விட்டுவிடு என்று (உமர் (ரலி) அவர்களிடத்தில்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் பதிலுக்கு ஒரு வார்த்தையும் அபூபக்ரிடம் பேசவில்லை.
நூல் : மாலிக்-2230 (1260)
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்ததோடு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்புகளைத் தரக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். சட்டம் தனக்குத் தெரியாத போது மனம் போன போக்கில் கூறி விடாமல் தெரிந்தவர்களிடம் கேட்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார்கள்.
கபீஸா பின் துஐப் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
(ஒரு வயதான) பாட்டி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து தனக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்பாட்டியிடத்தில் அல்லாஹ்வின் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வேதத்திலும் உமக்கு ஒன்றுமில்லை (என்று நான் நினைக்கிறேன்).
(இது தொடர்பாக) நான் மக்களிடத்தில் கேட்கிறேன். தாங்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடத்தில் (பாட்டிக்கு சொத்தில் பங்கு உண்டா என்று) கேட்ட போது முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (இதற்கு ஆதரவாக) உம்முடன் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) கூறியதைப் போன்றே கூறினார்கள். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பாட்டிக்கு ஆறில் ஒன்று என்றப் பங்கைச் செயல்படுத்தினார்கள்.
நூல் : திர்மிதீ-2100 (2027)
Comments
Post a Comment